Friday, October 21, 2011

2.இள வயது வேதாந்தி இவன் உருவமே சாந்தி



பிறந்தகுழந்தை  வளர்ந்தது பள்ளிக்கூடம் சென்றது
சிறந்தநண்பர் பலருடன் அதுவும்சென்று கற்றது 
தேவைஅதற்கு அற்றது கற்பிக்கவே சென்றது 
வாழ்வதற்குத் தேவையான பாடமுமே தானது 

ஆடும்வயதில் சிறுவர்கள் தேடியவனை வந்தனர் 
ஓடிஆடிப் பாடல்விட்டு அவனைச்சென்று மொய்த்தனர் 
கூடிநின்று அவனின்சொல்லைக் கேட்கஆவல் கொண்டனர்
கோடிஜன்மத்  தவத்தினாலே அவனின்நண்பர் ஆயினர்

 உண்மைவாயில் உண்மைகேட்கும் மேன்மைதன்னைப்  பெற்றனர் 
நன்மைமூலம் நன்மைபெற்று நற்கதியில் சேர்ந்தனர்
உரைத்துநிற்கும் சத்யம்அன்றி வேறுமில்லை சாமியும்

மறைந்துறையும் இறையும்வந்து இருந்ததவர் பாக்கியம்

சத்வஉணவு உண்ணுங்கள் சத்தியமே எண்ணுங்கள் 
கத்தும்மிருக வதையினைப் பெற்றோர் தவிர்க்கச் சொல்லுங்கள் 
நடப்பில்மேன்மை பூணுங்கள் பெற்றவரைப் பேணுங்கள் 
மதத்தில் பிரிந்துஇருப்பினும் மனதில்இணைந்து வாழுங்கள்

கற்றுநிற்க அதன்படி சத்யம்சொன்ன திப்படி
நன்றுஏற மனப்படி அறிவிலான ஓர்கொடி
நின்றுகூற தினப்படி வளரும்ஞானம் ஓர்செடி
சென்றுசேர இறையடி மேலுமில்லை ஓர்படி

சிறுவன்சத்யா சொன்னது கதையுமல்ல கருத்தது 
மறைபொருளை அறிந்திடும் சாதனையின் சிறப்பது 
பொறுமைகொண்டு பெரியவரும் கேட்டிடாத பொருளது 
வெறுமையிலே தவமும்கொள்ளும் யோகியர்க்கே உகந்தது 

கருமைநிறக் கண்ணனன்று சொன்னகீதை போன்றது 
விருப்பம்கொண்டு அதனைச்சிறுவர் கேட்கச்செய்ததாவது 
மனிதரான வேறுசிறுவன் செய்யஎங்கே கண்டது 
பொருத்தமன்றோ அவனைநாமும் இறைவனாகக் காண்பது

சொன்ன மட்டிலன்றியே செயலில்வாழ்ந்து காட்டினன் 
என்னவேண்டு மென்றுமே கேட்டுச்சேவை புரிந்தனன்
சின்னஉருவில் மண்ணில்வந்த நாரணனாம் அரியிவன்
சொன்னவண்ணம் செய்யுகின்ற எண்ணம்கொண்ட அறிவிவன்

இரந்துகேட்கும் வறியவர் பசியைப்போக்கி மகிழ்ந்தனன் 
துறந்துஉணவை அளித்ததால் நீரைஉணவாய்க் கொண்டனன் 
உடையைத்தானம் கொடுத்தனன் உடுக்கஒன்றே கொண்டனன் 
மடைதிறந்த வெள்ளமாய்க் கருணையிலே பெருகினன் 

பெயரில்பெரிய வெங்கமர் சத்தியத்தின் தந்தையாம் 
உயர்வில்நிற்கும் பிள்ளையின் அறிவிலவர்க்கு உவகையாம் 
வயதைமீறும் குணத்துரம் நோக்கியவனைக் கருதினார் 
சிறுவயதில் தோன்றி பெரியதோர்வே தாந்தியாய்..!

No comments:

Post a Comment