Sunday, October 23, 2011

3. வயதுமுதிர்ந்த கொண்டமர் ஞானம்பிறக்கக் கண்டவர்


சத்தியத்தின் தந்தையின் தந்தையாவார் கொண்டமர் 
நித்தியத்தில் இறைவனின் நினைப்புமனதில் கொண்டவர் 
வம்சம்ரத்தி னாகரம் தன்னிலவ தூதராம் 
வெங்கவரின் மீதுபக்தி மனதில்மிகவும் கொண்டவர்

இறையின்போத வெங்கவ தூதர்தன்னின் பக்தராம் 
பிறைகள்கண்ட கொண்டமர் அறிவில்இறையைக் கண்டவர் 
உறையும்இறையின் வடிவம்தான் பேரன்சத்யம் என்பதை 
விரைவிலறிந்த பெரியவர் ஞானத்தில்பி தாமகர் 

சிறந்தவந்த கொண்டமர் பெற்றதிரு பிள்ளையாம்
சிறியபெரிய வெங்கமர் என்பதவர்கள் பெயர்களாம் 
வயதில்பெரிய வெங்கமர் சத்தியத்தின் தந்தையாம் 
இயைந்துவாழ்ந்த சோதரர் மனைவியிடையே பூசலாம் 

இதனைப்பார்த்த கொண்டமர் சிந்தனையில் ஆழ்ந்தாராம் 
தனித்துவாழப் பிள்ளைகளைப் பணித்துஅவரும் சொன்னதாம் 
தனித்துவத்தின் மகத்துவமாம் சத்தியமே என்துணை 
இனித்துமுங்கள் துணைகள்கொண்டு சென்றுதனியே வாழுங்கள்

புரிந்துகொண்ட பிள்ளைகளும் தனியேசெல்ல விசைநதனர்
அறிந்துகொண்ட கொண்டமரின் அறிவைஎண்ணி வியந்தனர்
புரிந்துமெடுத்த முடிவும்சிறுவன் ஆமோதிப்பால் எடுத்தது
அறிந்திடாத உள்ளங்களின் அறியாமைஎன் னென்பது..!

தெய்வத்தாயாம் ஈசுவரி மாமனாரை வேண்டினாள்
ஓய்வதனை எடுக்கும்வயதில் தனித்திருக்க லாகுமோ
செய்வதென்ன வேண்டும்நானும் என்றுகேட்டு வேண்டினாள்
உய்யமனையில் வேண்டுமென்று கெஞ்சியுமன் றாடினாள்

சேயின்வெளுத்த உள்ளம்கொண்ட கொண்டமர்சி ரித்திட்டார்
தேனிலுற்ற கனியின்இனிமை சொற்களையே உதிர்த்திட்டார்
பையச்சேர்த்த செல்வம்யாவும் பங்கிட்டுப்பீர் நீங்களே
பையனாக வந்தபேரன் சத்யம்ஒருவன் போதுமே

வெய்யிலாக துன்பம்வரினும் குடையுமாவான் பேரனாம்
ஓயும்காலம் வரையில்சாயத் தோளுமாவான் சத்தியம்
பாரிலெந்த பயமுமில்லை எனக்கு நீயும் அறிந்திடு
பாய்வதான மனதைத்தேற்றி அமைதிகொண்டு சென்றிடு

வேறுவழி கண்டிலள் திகைத்துஅவளும் சென்றனள்
சிறுவன்பேரில் கொண்டமரின் பற்றைஎண்ணி வியந்தனள்
பெருமையுமோர் ஓரத்திலே நெஞ்சில்பிறக்கக் கண்டனள்
எனினும்சிறுவன் என்றேயவனை அன்றுமவளும் எண்ணினள்

கூறுமடி யார்கள்காக்கும் கோவிந்தனென் றறிந்தவர்
பாரிலுரு பிறவிக்கடலைக் கடக்கநினைப்பு கொண்டமர்
தேறுமொரு அறிவினாலே அரியைஅவனில் கண்டவர்
வேறெவரும் பெற்றிராத ஞானத்தையே கொண்டவர்

தந்தைக்குமே மந்திரம் சொன்னஸ்வாமி நாதனும்
வித்துமான மந்திரம் சொன்னமட்டில் நின்றவன்
சத்தியமோ கருணையால் தந்தைபெற்ற தந்தைக்கு
நித்தியமும் சேவைசெய்யும் தாயுமாக ஆனவன்

எழுந்துவீட்டைக் கூட்டுவான் விரைந்துஅடுப்பை மூட்டுவான்
விழைந்துயாரும் உண்ணும்வண்ணம் உணவும்ஆக்கி ஊட்டுவான்
அழைக்குமுன்னர் சேவைஆற்றச் சுறுசுறுப்பாய் ஓடுவான்
நுழைந்துதெய்வம் தங்கும்வண்ணம் வீட்டைக்கோயி லாக்குவான்

அழகுக்கண்ணன் பாரதிக்கு சேவகனாய் ஆனது
அதற்குப்பின்பு தோன்றியது தெய்வமிங்கு தானது
அமிழ்தினிலே இருப்பதான இன்பத்திலே அமிழ்ந்தது
குமிழ்ச்சிரிப்பின் பாலகனால் கொண்டமரின் நெஞ்சது

செய்வதாகச் சொன்னதெல்லாம் பெண்கள்கூடச் செய்வது
ஆய்வதாகத் தேடிசென்றும் கிடைக்கவரி துமாகுது
காய்வதான வெய்யிலிலும் வெளியில் சென்றேதாவது
ஓய்ந்திடாமல் ஆடும்விடலை செய்யும்செயலு மாஇது?

அற்புதங்கள் நிகழ்த்திசொகுசில் வாழவில்லை தெய்வமும்
பொற்பதங்கள் சேறில்பட்டும் கோணவில்லை யதன்முகம்
ஏற்றதாகக் கொண்டவந்த மனிதப்பிறப்பின் தன்மையில்
போற்றலாக வாழ்ந்துகாட்ட ஈடுபட்ட தன்னையும்

உலகில்சின்னப்   பிள்ளைஉண்ணும் தேனும்பாலும் சோறுமே
அவனும்உண்ணக்  கீரையுடன் கேழ்வரகின் சேறுமே*
எவனும்உண்ண தினமும்அதனை வாழ்வும்வெறுத்துத் தோன்றுமே
இளவயதில் சிரித்துஉண்ட அவனும்தெய்வத் தோற்றமே
*சேறு = களி

வீட்டு வேலை முடித்துப்பிள்ளை பள்ளிஓடிச் செல்லுமாம்
பாட்டனுக்கு பரிந்துணவு அளிக்கமதியம் திரும்புமாம்
வீட்டிலிருந்து புக்கப்பட்னம் மீண்டுமதுவும் ஓடுமாம்
ஓட்டம்கொண்டு செய்ததவன் நாட்டம்கொண்டு சேவையாம்

இதனைக்கண்ட பாட்டனாரின் மனதுமிகவும் நொந்ததாம் 
சுதனைச்சுகமாய் வளர்த்திடாத கொடுமைஎண்ணி சொன்னதாம் 
எதனால்மதியம் திரும்பணும் என்னால்நீ ஏன்வருந்தணும் 
என்னால்உண்ண லாகுது சொன்னால்நீயும் கேக்கணும்

சிரித்தான் பேரன் இதைக்கேட்டு
சொன்னான் அவனும் இதம்தொட்டு
எதில்தான் இல்லை இக்கட்டு 
செய்வதால் சேவை மெனக்கெட்டு 
போவதே இல்லை மனம்கெட்டு
ஆவதிப் பயிற்சியால் உடல்கட்டு
போகுதே சோம்பலும் உடல்விட்டு
நோவதேன் நீங்களும் இடர்ப்பட்டு 

நீக்குவீர் அதைநீர் மனம்விட்டு
நோக்குவீர் இதில்உள்ள நலம்கண்டு 
நின்றதோர் சித்தனின் வயப்பட்டு 
என்றவோர் சிறுவனின் வயதெட்டு 

கதையென்று கொள்ளாமல் நீகேட்டு 
அதைச்சென்று தள்ளாமல் நீதொட்டு 
நிதம்நன்று கொள்ளணும் சிதம்பட்டு
பதம்நின்று தோன்றுமே சிரம்பட்டு 

சிரித்தார் கொண்டமர் இதைக்கேட்டு
அறிந்தார் இவனுமோர் சிறப்பென்று 
தெரிந்தார் இறைவனின் பிறப்பென்று 
கரைந்தார் நெகிழ்ச்சியில் மனம்ன்று

பிழைத்திட உடல்சாகா உய்யும் எண்ணம் 
மட்டுமே கொண்டவன் உண்ட தெல்லாம் 
கட்டிய கேழ்வரகின் களியு மன்றி
வெட்டிய கீரையின் குழம்பே ஆகும்
சட்டியில் கீரையும் கிட்டா தாயின் 
கடலையின் துவையலைத் தொட்டுக் கொள்வான்

இனித்திடப் பழகிடும் சிறுவனுக்கு 
இனிப்பினில் கொண்டிட்ட இட்டமில்லை 
இருப்பினும் அவைதனை நன்குசெய்து
பிறர்தின்ன யாவுமே பகிர்ந்தளிப்பான் 

அமைதியின் உருவான உளமுமானான் 
சமையலில் சிறப்பான நளனுமானான்
நலமில்லா உடல்கொண்ட ஊரா ரெல்லாம் 
நலம்கொள்ள சரமாக வரிசைகொண்டு
அவன்கைய்யின் ரசம்உண்ண நின்றிருப்பார்
இறைவனின் வசம்தன்னில் சென்றிருப்பார்
எங்கணும் காணாத தொன்று மாக 
கண்ணனின் சிறந்திட்ட மேன்மை கண்டு 
மண்ணினில் பிறந்திட்ட இறைவன் என்று 
எண்ணினார் கொண்டமர் மனதில் அன்று 
வேண்டினார் சிறுவனின் கைகள் பற்றி 
விண்ணினில் நான்ஏகும் நாளில் சற்றே
தண்ணீரில் நாவினை நனைக்கும் வண்ணம் 
செய்வாயா நான் பெற்ற தெய்வம் நீயே.


கேட்காமல் கொடுத்திடும் தாயு மானான் 
கேட்டதும் கொடுத்திடும் கண்ண னானான் 
கிடைத்திடும் மோக்ஷத்தில் அவரும் கூட 
படைத்திடும் நாரணன் அருளிச் செய்தான்..!



No comments:

Post a Comment